Friday, 24 July 2015

நிலத்தடி நீர் - what's app ல் கண்ட கட்டுரை

நிலத்தடி நீர் மட்டம் தரைமட்டத்திலிருந்து 3 - 5 மீ ஆழத்தில் இருந்தது. ஐம்பதுகள் வரை பயிர்களுக்குக் கமலைக் கிணறுகளில் மாடு பூட்டி நீரிறைத்தனர். நிலத்தடி நீர்மட்டம் மேலாகவிருந்த ஆறு, வாய்க்கால் பகுதிகளில் ஏற்றத்தால் நீரிறைத்தனர். அக்காலத்தில் கிணறு தோண்ட விரும்பும் விவசாயி பொதுவாகத் தோட்டத்தின் 'ஜலமூலை' எனும் வடகிழக்குப் பகுதியில் கிணறு தோண்டுவார். அருகிலுள்ள அடுத்த தோட்டத்துக்காரர்களும் அவர்களது தோட்டங்களின் வடகிழக்கு மூலைகளில் கிணறுகள் தோண்டியதால், ஒரு கிணற்றுக்கும் அடுத்த கிணற்றுக்கும் 'ஒரு தோட்ட' இடைவெளி இருந்தது; இது வாஸ்து நம்பிக்கையால் ஏற்பட்ட மறைமுகமான நன்மை. அக்கினிமூலையான தென்மேற்குப் பகுதியில் தோண்டியிருந்தாலும் அன்று நீர் கிடைத்திருக்கும் என்பது வேறு விஷயம். வடகிழக்குப் பகுதியில், குறிப்பாக எந்த இடத்தில் கிணறு தோண்ட வேண்டும் என்ற முடிவுக்கு வரவியலாத விவசாயிகளில் சிலர், அதிகாலையில் தோட்டத்திற்குப் பசுமாட்டை ஓட்டிச் சென்று அது எங்கு மூத்திரம் பெய்கிறதோ அங்குக் கிணறு தோண்டினர். வேறு சிலர் குரும்பை ஆட்டின் முதுகின்மீது ஒரு பிடி மண்ணை வைத்து அதை ஓடவிட்டு அது எங்கு நின்று உடலைச் சிலிர்த்து மண்ணை உதறுகிறதோ அங்குக் கிணறு தோண்டினர். குரும்பையாடு, பசுமாடு தவிர, பச்சைக் கவட்டைக் குச்சி ஏந்தியவர்களுக்கும் ஏக கிராக்கி அன்று. நிலத்தடி நீர் கிட்டும் மட்டத்திலும் அளவிலும் கூடுதல்குறைவு இருந்தாலும் பொதுவாக எல்லா இடங்களிலும் அப்போது நிலத்தடி நீர் இருந்தது. நிலத்தடி நீரின் மட்டம் மேல் மண்ணுக்குக் கீழேயுள்ள மக்கிய பாறைகளில் (இதைக் கொங்குத் தமிழில் 'மசணை' என்பர்) இருந்தது. பின் என்ன ஆனது? ஐம்பதுகளில், காங்கிரஸ் அரசுக் காலத்தில், தமிழ் நாட்டுக் கிராமங்களை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் மின்சாரமயமாக்கலுக்கு முக்கியமான இடம் இருந்தது. உடனே வசதியுள்ள விவசாயிகளின் கிணறுகளில் மின்சாரத்தால் இயங்கும் நீரேற்றிகள் இயங்க ஆரம்பித்தன. அவை கமலை, ஏர் இறைத்த நீரைவிடப் பலமடங்கு அதிக அளவில் நிலத்தடி நீரை அள்ள ஆரம்பித்தன. அறுபதுகளின் இறுதியில் தோட்டங்களில் கமலைகளின் ஓசையும் ஓய்ந்தது; வயல்வெளிகளில் ஏற்றப் பாட்டு கேட்டதும் நின்றது. முன்பு இறைக்கப்பட்ட நிலத்தடி நீரைவிட அதிக நீர் இறைக்கப்பட்டு, அதிக நீரை உட் கொள்ளும் பயிர் வகைகளும் பயிரிடப்பட்டன. ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு கிணறுகளைத் தோண்டி, நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கொள்ளவும் நிலத்தடி நீரின் மட்டம் இறங்க ஆரம்பித்தது. தகப்பன் தோண்டிய கிணற்றை மகன் ஆழப்படுத்த ஆரம்பித்தான். அந்தக் கால கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம், மக்கிய பாறைகளிலிருந்து தாழ்ந்து அதற்கும் கீழேயுள்ள கடினப் பாறைகளிலுள்ள பிளவுகளிலும் வெடிப்புகளிலும் விரிசல்களிலும் தேங்க ஆரம்பித்தது. விடுவார்களா நம்மவர்கள்? வளைக்குள் ஒளிந்திருக்கும் எலியைத் தேடிப்பிடிக்கும் சாரைப் பாம்புகள்போலத் தோண்டு கிணறுகளின் அடித் தளத்தில் துளைகளிட்டும் கிணற்றின் பக்கவாட்டில் துளைகளிட்டும் கிணற்றின் நீர்ச்சுரப்பைப் பெருக்குவதற்கான காரியங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவர் 50 மீ தோண்டினால் அடுத்தவர் 60 மீ தோண்டுவார். இப்படியாக ஒருவருக் கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு நிலத்தடி நீரகத்தை வற்றடித்தனர். மணற்கேணி, தொட்டனைத்து ஊறும். ஆனால், கடினப்பாறைகளில் தோண்டப்படும் கிணறுகள் அவ்வாறானவையல்ல. நிலத்தடி நீரகம் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமன்று. பூமியின் மேற்பரப்பில் உள்ள நீர்நிலைகளிலும் தாவரங்களின் இலைகளிலும் உள்ள நீர், சூரியனின் வெம்மையால் ஆவியாகி, மேகங்களாகத் திரண்டு, வானிலையைப் பொறுத்து மழையாகப் பெய்வதை நீர் சுழற்சி என்கிறோம். மழை நீரின் ஒரு பகுதி நிலத்தின் அமைப்பைப் பொருத்து ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடிக் கடலில் சங்கமமாகிறது. தரையின் மேற்பரப்பில் வழிந்தோடும் மழை நீரின் ஒரு பகுதி ஏரிகளிலும் குளங்களிலும் தேங்கி, அதன் ஒரு பகுதி சூரியனின் வெம்மையால் நீராவியாக மாற, மீதமுள்ள நீர் நிலத்தடி நீராக பூமியினடியில் இறங்குகிறது. மணற்பாங்கான அல்லது படிவப்பாறைகள் உள்ள பகுதிகளில் மழைநீரில் 12 - 15 விழுக்காடும் பாறைப் பாங்கான பகுதிகளில் 4 - 6 விழுக்காடும் நிலத்தினுள் இறங்குகிறது. நிலத்திற்குள் இறங்கும் நீரின் ஒருபகுதியால் தாவரங்கள் பயனடைகின்றன. மீதியுள்ள பகுதி வேர்மட்டத்திற்குக் கீழேயுள்ள நுண்துளைகள் வழியாக இறங்கி, பின்னர் ஊடுருவவே இயலாத கடினப்பாறைவரை சென்று தேங்குகிறது. நிலத்தடி நீரைக் கொண்டுள்ள பூரிதப் பகுதியை நீரகம் என்பர். இந்த நீரகத்தில் தேங்கியுள்ள நீரின் மட்டம், புவியியல் அமைப்பையும் பெய்யும் மழையின் அளவையும் பொருத்தே அமையும். எழுபதுகளில் கோவைக்கு அருகாமையில் நிலத்தடி நீர்மட்டம் 30 - 40 மீ ஆழத்தில் இருந்தது. இன்றைக்கு 80 - 100 மீ கீழே உள்ளது. கோவை நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலுமுள்ள விவசாயிகளும் தொழிற்சாலைகளும் குடியிருப்புகளும் நிலத்தடி நீரை அபரிமிதமாகப் பயன்படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் இறங்க ஆரம்பித்தது. ஓராண்டில் உறிஞ்சி எடுக்கப்படும் நிலத்தடி நீர், ஓராண்டில் ஊறியிறங்கும் நீரின் அளவைவிடக் குறைவாக இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாகச் சேகரமாகி இருப்பில் இருக்கும் நிலத்தடி நீரை அளவுடன் உபயோகப்படுத்த வேண்டும். நிலத்தடி நீர், இயற்கையால் புதுப்பிக்கப்படும் வளம். நிலத்தடி நீரகத்திலுள்ள நிலத்தடி நீர், வங்கியில் இடப்பட்ட வளரும் மாதச் சேமிப்பு போல. பருவங்கள்தோறும் பெய்யும் மழையின் ஒரு பகுதி நிலத்தடி நீரகத்தில் சேகரமாகிறது. அந்தச் சேகரத்திலிருந்து நாம் ஆண்டுதோறும் எடுத்துப் பயன்படுத்தும் நீரின் அளவு ஆண்டுதோறும் மழை கொடுக்கும் நீரின் அளவைவிடக் குறைவாக இருந்தால் சேகரம் வற்றாது. பருவமழை தவறி, வறட்சி ஏற்படும் ஆண்டுகளில் ஓரளவு சேகரிப்பிலிருந்து எடுக்கலாம். அடுத்த ஆண்டு சராசரி மழையைவிட அதிக மழை பெய்தால், இந்தக் குறைவு நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். ஆனால், தொடர்ந்து சேகரத்திலிருந்து அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும். இதை நிலத்தடி நீர் அகழ்வு என்பர். இதுதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.