Thursday, 29 August 2019

குறைந்தது...

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலாவது
வீழ்தல் வேண்டும்.

Sunday, 2 June 2019

ஒரால் நலம்

தன்னை அடையாளம் கண்டு தன்னை தன் முரண்களோடு நேசிக்கும் உறவு மனதில் தன் இராட்சச வேர்களைப் பரப்பும்போதும்

உறவில் ஓர் அந்தரங்கத் தனிமை நோக்கி நகரும் போதும் 

உறவாக அன்பில் வாழ இயலாது பதறும்போதும்

உறவில் காதலையே உணராத போதும்

உறவில் அடுத்த நிலை நோக்கி நகர திராணி இல்லாத போதும்

பேரன்பை பெருஞ்சுமையாய் உணரும்போதும்

பிரிவின் துயர் நினைத்து அஞ்சும்போதும்

ஓர் உறவை முறித்துக்கொள்ளுதல் தேவையாயிருக்கிறது.

இங்கு ஓர் உறவை முறித்துக்கொள்ளுதல் என்பது
ஒருவரை விட்டு விலகிச்செல்லுதல்
ஒருவரை வாழவிடுதல்.

Thursday, 11 April 2019

தீராப் பிணி

கலை
இலக்கியம்
வேலை
உடற்பயிற்சி
சாராயம்
பயணம்
என எந்த போதையும் கைகொடுக்கவில்லை
இந்த போதைக் கோதையைக் கொய்தெறிய.

கட்டக் கடைசியாக காமதேவனிடம் கையேந்தினால்
இன்முகத்தோடு திமிருடன் சொன்னான்
கண்டுகொள் காமத்தின் ருசி என்று.

அள்ளிப் பருகி காமுகனாய் உருமாறி உலவித் திரிகையில்
புதைமணலில் முகிழ்க்கும் நீர்க்குமிழிகள் போல
விந்துக்குவியலினூடே பணிந்த கண்கள் கொண்டு முழித்து முழித்துப் பார்க்கிறது
இந்த மாயப்பிசாசு

இந்தப் பாழாய்ப்போன அன்பெனும் சனியனை எப்படித் தொலைக்க ?

Wednesday, 6 February 2019

வீ

ஏன்? எதற்கு? எப்படி?
என்றெல்லாம் தெரியாது
அவனிடம் பேசத் துவங்கினேன்
பிடித்திருந்தது
பிடித்திருந்தது என்றால் பிடித்திருந்தது
அவ்வளவுதான்

பேசப்பேசச் சொற்கள் எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காத ஒரு உறவுச் சங்கிலியை செவ்வனே செப்பனிட்டது

அவன் நிறைய பேசினான்
சண்டையிட்டான்
கோபப்பட்டான்
தன் உள்ளக் கங்குகளை உள்ளது உள்ளபடியே என் நெஞ்சில் வீசினான்
என் உள்ளம் குளிர்ந்தது
பெரும்பாலும் ஒன்றும் விளங்காது
விளங்கினாலும் மனம் ஏற்றுக்கொள்ளாது அடம்பிடிக்கும்

அவன் என்றும் வாழ்வின் சிடுக்குகளையே பேசினான்
எதிர்மறை எண்ணங்களை அள்ளித் தெளித்தான்
தன்னை தன் நிறை குறைகளோடு அப்படியே வெளிப்படுத்தினான்
அன்பை உமிழ்ந்தான்
வெறுப்பை ருசித்தான்
அத்தனையும் உண்மைக்கு அணுக்கமாக இருந்தது
அல்லது
அப்படி ஒரு மாயையை அவன் என்னுள் உருவாக்கினான்

பெரும்பாலான நேரங்களில் நான் பெண் என்பதையே அவன் மறந்து விட்டிருந்தான்
அது ஒரு பெரும்புதிராக இருந்தது

வாழ்வின் மீதான என் அத்தனை நேர்மறை எண்ணங்களின் மீதும்
கல்வீசிய அவனைக் கண்டு நான் பயந்தேன்

நானோ பரிசுத்தமான காதலின் பிரியை
அவனோ காமத்தின் காதலன்
நானோ திருமண வாழ்வின் சுவை தேடுபவள்
அவனோ திருமணத்தின் கசப்பைக் கக்குபவன்
நானோ தன்னம்பிக்கையின் ஒரு துளி
அவனோ அவநம்பிக்கையின் கடல்
நானோ கடவுளின் குழந்தை
அவனோ சாத்தானின் தோழன்

இருந்தும்
அவன் என்னை இன்னும் நெருங்கினான்
நான் கட்டமைத்திருந்த உலகில் அவன் சிறு சிறு கற்களை வீசி உடைத்து உள் நுழைந்தான்

புத்தி எச்சரிக்கை செய்தது
மனவேலியை இன்னும் வலுவாக்கினேன்
மீண்டும் எளிதாக நுழைந்தான்
மனம் எனும் மாயையைக் காறித் துப்பினேன்

சங்கிலியில் துரு ஏறுவதை நான் விரும்பவில்லை
எங்கு எப்படி அறுப்பது அல்லது தொடர்வது என்று எனக்குத் தெரியவில்லை
விட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தேன்
அது சுலபமாயிருந்தது

அவனுக்காக மனம் உருகி வேண்டிக் கொண்டேன்
வேறென்ன செய்ய முடியும் அவனுக்கு என்னால்?
அவன் வாழ்வில் நான் இல்லாமல் போவதை விட.