Saturday, 6 October 2018

'தொண்ணூற்றாறு' எனும் திரைக்கவிதை

“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே யுள”

கண்ணால் காண்பதை எல்லாம் காதால் கேட்க முடியாது.
காதால் கேட்பதை எல்லாம் கையால் தொட முடியாது.
தொடுவதை எல்லாம் நுகர முடியாது.
நுகர்வதை எல்லாம் உண்ண முடியாது.
ஆனால், கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும்  ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே!
~~
ஒரு பெண்ணின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டவனை விட, மையல் கொண்டு திரிபவனை விட, ஒரு பெண்ணை அணு அணுவாய் நேசித்தவனை விட, எந்த அனுபவங்களும் கிடைக்கப்பெறாத ஒருவனால் இன்னும் அதிகமாக காதலின், அன்பின், பிரிவின் உணர்வுகளுக்குள் ஊறித் திளைக்க முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை!

பேசிப்பழகும் போது காதலில் விழுவதற்கான பல தருணங்கள் வாய்த்திருந்தும் சூழலோ, கோழைத்தனமோ, மனநிலையோ, இயலாமையோ, சுயகழிவிரக்கமோ, சொல்ல முடியாத ஏதோ ஒன்றோ தடுத்துவிட்ட அந்தப் பொன்னான தருணங்களை இழந்த யாரும் தங்களை எல்லாக் காதல் கதைகளுடனும் தொடர்புபடுத்திக் கொள்ளமுடியும். காதல்வெளியில் இறக்கைகளின்றி பறக்கமுடியும்.
அந்த வகையில், ஒவ்வொரு காட்சியிலும் காதலில் விழுந்துகொண்டே இருந்த ஒரு திரைக்கவிதை '96. விழவே வேண்டாமென்று தள்ளி நின்று ரசித்த அத்தனை உள்ளங்களும் இந்தக் காதலில் விழுந்துவிடும்! இந்தக் காதலைக் கொண்டாடும்!

காதலில் விழுந்து, வாழ்ந்து, திளைத்து, மகிழ்ந்து, சேர முடியாமல் பிரிந்த அத்தனை உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர்களுக்கு இத்திரைக்கவிதை கடத்தும் வலி சொல்லில் அடங்காதது!

‘காதலிப்பதால் கிடைப்பதில் பாதிசுகம்…பார்த்துக்கொண்டிருப்பதில்தான் இருக்கிறது' எனும் வள்ளுவன் கூற்றை அப்படியே கடத்தியிருக்கிறார்கள் திரையில்!
கண்கள்! கண்கள்! கண்கள்! திரைமுழுக்க பார்வைகளின் மாயம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கண்கள்தான் எப்பேற்பட்ட உணர்வு கடத்தி! இத்திரைக்கவிதை காதல்பித்தனால் மட்டுமே முடிந்த ஒன்று! மற்றபடி, அவனது நினைவுச் சிதறல்களில் ஏதோ ஒரு நிகழ்வில் எல்லோரும் பயணம் செய்யலாம்!

கலை காட்சிகளின் கையாடல் என்பதற்கு இந்தத் திரைக்கவிதை ஒரு நற்சான்று!

வேறென்ன சொல்ல!

காதலின் ஈரம் உணரச் செய்த கலைஞர்களுக்கு அன்பு முத்தங்கள்!!!

Saturday, 11 August 2018

காற்றில் உலவும் சொற்கள்

அவளுடைய பழம்புதுமைப் பெயரில் தொடங்கியது எனக்கும் அவளுக்குமான ஊடல்.
இந்தத் தலைமுறைக்கு  ஏற்றாற்போல் தன் பெயரைச் சுருக்கி வைத்துக்கொண்டு
அப்படித்தான் விளிக்க வேண்டுமென அடம்பிடிக்கும் வளர்ந்த குழந்தை அவள்!
தேவதை அவள்!

காலத்தின் மேற்பார்வையில்
எண்ணற்ற உரையாடல்களால் நெய்யப்பட்டு எங்களுக்குள் இழையோடிய அன்பின் கொடியை அறுக்க விரும்பாமல் முன்னுணர்வோடு
பெயரில்லா உறவென்று பெயர் வைத்துக்கொண்டோம்.

சொற்களால் உண்டான உறவில்...
ஒரு புள்ளியில், ஒருவர் அறியாமல் ஒருவர் தன் மனக்கூட்டுக்குள்ளேயே சேர்த்து வைத்த அன்பின் சொற்கள் நிறைந்து, வழிந்து, அயர்ந்து, இதற்கு மேல் உங்களுக்கு உதவ முடியாது என்று சிதறி ஓடின. அதன்பின்
சொற்களற்ற அமைதி-
அமைதியின் ஆர்ப்பரிப்பு.

அமைதியின் விளைவாக
அவளது திருமணம்-ஒரு நீண்ட இடைவெளி-குழந்தை.

இனி அவளுக்குப் பேசுவதில் இடையூறு எதுவும் இல்லை
தயக்கம் இல்லை
வெட்கம் குழைத்த கூச்சம் இல்லை
பாதுகாப்பு அரண் கிடைத்துவிட்டது.

உறக்கமில்லா நீண்ட இரவுகளும்
பேரிருளில் வெளிச்சப்புள்ளிகளாய் கசியும் நினைவுகளுமாய் நாள்கள் நகர்ந்துகொண்டிருந்த போது
ஓர் நாள்
தன்னை ஒரு "பெண்" என்று அறிமுகம் செய்து கொண்டாள்.
என் முகம் கூட தெளிவாக நினைவிலில்லாது என்னைப் பற்றி முழுதும் அறியாது ஏன் என்றே தெரியாமல் எனக்காக அழுததாகச் சொன்னாள்.
நான் என் உணர்வைத் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்றாள்.
என்னைப்பற்றி ஒரு நம்பிக்கை ஏற்படாதவாறு கடைசிவரை அவளைக் குழப்பினேன் என்று சொன்னாள்.
அவளை என் ஆய்விற்கு நான் பயன்படுத்திக் கொண்டதாகச் சொன்னாள்.
' திருமணம் செய்து கொள்வாய் அல்லவா?' என்று கேட்டுவிட்டு
சில நொடிகளுக்குப் பின்
' செய்துகொள்ள வேண்டும்' என பதில் சொன்னாள்.
குற்ற உணர்வு கொள்வதாகச் சொன்னாள்.
நினைவுநாடாக்களில் உயிருடன் உலாவிய மனச்சொற்கள்
அனைத்தையும்
திரும்பவும் ஒரு பெரு மெனக்கெடலுக்குப் பின் மூளைச்சொற்களாக வெளிப்படுத்தினாள்.
கடமைக்காக இன்னும் என்னன்னவோ சொன்னாள்.

அதன்பின்னான உரையாடல்களில் சொற்களின் மீது என் மீதான கழிவிரக்கத்தின் நெடி தீவிரமாக வீசியது. முதல்முறையாக சொற்கள் கசந்தது எனக்கு.

எதற்காக இத்தனை மெனக்கெடல்கள்?
இத்தனை விளக்கங்கள்?
அவள் வாழ்வில்
நிகழ்ந்துவிட்ட அன்பின்பிழை நான்
காலம் நிகழ்த்திய பெருந்தவறு நான்
கோழை நான்
முட்டாள் நான்
என்று சொல்லாமல் சொல்கிறாளா?

எனக்குப் புரியவில்லை.
எங்கோ தட்டிற்று.

ஆனால், ஒன்று மட்டும் மிக உறுதியாகத் தெரிந்தது.
அவள் மனமெனும் பச்சை பசேலென்ற வயல்வெளியில் பிடுங்கி எறியப்பட வேண்டிய களை நான்!

Monday, 6 August 2018

ஒரு சிறிய காதல் கதை என்பது...

பேருந்துப் பயணமொன்றில் கருத்த தேவதை வண்ணம் பரிமாறி எண்ணும் பரிமாறிய நாளின் மழை இரவில் நாட் ரீச்சபிளாகி நெஞ்சில் தீ வைத்தல்
அல்லது
மருத்துவரின் டோக்கன் ஏந்திய காரிகை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி கடையனான நம்மைக் கண்வைத்து இடையில் செருகிவிடுதல்
அல்லது
முகநூல் முக்கத்தின் சந்தன மையலில் கரைந்து வழிய வழிய உரையாடி இன்பாக்ஸ் வரையோடி நம் ஆத்திரம் பொங்க ஒருத்தி ஆணாய்ப் போதல்
அல்லது
நேற்றின் வெண்பனி பூக்கும் கருமிரவில் ஒருதலைக்காரி முத்தமிட நெருங்கையில் இன்று கனவு மறந்து போதல்
அல்லது
பத்தாண்டுக் கனவுகளோடு கதவினைத் தாழிட்டு உட்சென்று பார்த்தால் ஒருத்தி பல்லாண்டின் ஒளியோடு தவளையெனக் கிடத்தல்
மற்றும்
நாளிதழ் ஒன்றில் உல்லாசமாக இருந்த நாம் அதே ஒருத்தியின் கணவனால் மாலை நாளிதழில் கொலையுண்டுபோதல்!

- ஸச்சின்
ஆனந்த விகடன்(11.11.2015)

Sunday, 18 February 2018

நியாயப்படுத்துதல்

பெற்றோர்கள் பிள்ளைகளிடமும் பிள்ளைகள் பெற்றோரிடமும்
கணவன் மனைவியிடமும்
மனைவி கணவனிடமும்
காதலன் காதலியிடமும்
காதலி காதலனிடமும்
இன்னபிற இரத்த சொந்தங்களும்
நட்புகளும் புதுமுகங்களும்
இனி வரப்போகும் மனித உறவுகளின் அத்தனை வடிவங்களும் என  ஒவ்வொருவரும் தன்னை, தன் நிலைத்தன்மையை எதற்கென்றே தெரியாமல் நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் ஏதோ ஒரு வகையில்.
ஆம், இந்த உலகில் நியாயப்படுத்துதல் அவசியமாகிறது.

Tuesday, 6 February 2018

ஆசை

தவறுகளுக்கும்  குற்றங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஆசை
தன்னம்பிக்கையுடன் செயல்பட ஆசை
அன்பில் நீந்த ஆசை
மூளையை அடித்துத் துவைத்துச் சரிசெய்ய ஆசை
மழலையின் மனநிலையை மட்டுமே கொண்டிருக்க ஆசை
நட்பு சூழ் உலகில் உலவ ஆசை
ஏகாங்கியாய் உலகைச் சுற்றி வர ஆசை
இப்படி எண்ணற்ற ஆசைகளுக்கும் மேலாய்
இத்தனை ஆசைகளுக்குள்ளும் அடைபடாமல் 
இதுகாறும் என்னைக் கொடியாய்ச் சுற்றியிருக்கும்
எதையெல்லாம் தவறெனச் சிறுவயதில் மனதில் விதைத்ததோ
அதையெல்லாம் வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளில் சரியென தர்க்கம் பேசிக் குழப்பி அதற்குப் பழக்கப்படுத்தும்
செறிவற்ற சிடுக்குகள் நிறைந்த இந்தச் சமூக அமைப்பில்
தெரிந்தே விழ பேராசை!