Monday, 4 September 2017

இருத்தலியம் அவ்வளவு எளிதல்ல

தாயின் முலையில் பால் அருந்தும்
அந்த முதல் தருணம் அறிமுகமாகிறது
பெண் தேகத்தின் வாசனை
காமத்தின் வாசனை
ஒரு ஆணுக்கு.

பதின்மம் தொடங்கி இறப்பு வரை
பெண்ணுக்கே புரியாத புதிராக விளங்கும்
அவள் உடல் சார்ந்த அதிசயங்கள்
ஒரு ஆணுக்கு எப்படி விளங்கும் ?

சிறு வயது முதல் பெண் சார்ந்த எந்த விடயத்தையும்
தெளிவு படுத்தாமல் பூடகமாகவே வைத்திருக்கும் இச்சமூகம்
பாழாய்ப்போன ஆணிடம் என்ன மாதிரியான நேர்மையை
எதிர்பார்க்க முடியும் தோழிகளே ?

பெண் உடல் மீதான ஈர்ப்பும் கற்பனையும் உண்டாக்கும் மனஉளைச்சலால்
ஆயிரமாயிரம் அரூபப் பெண்களின் கொங்கைகளில் முகம் புதைத்து
சும்பனமிட்டு யோனிகளில் ஆண்குறி நுழைத்து கரமைத்துனம் செய்யும் ஆணிடம்
என்ன மாதிரியான நேர்மையை எதிர்பார்க்கிறீர்கள் தோழிகளே ?

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை  அத்தனை சிக்கலானது !
மனமின்றி உடல் சார்ந்தே பொருந்தும்  ஒரு வெங்காயக் கொள்கை  !
எந்தப் பெண்ணையும் நோக்கா ஒரு ஆண்
ஒரே ஒரு பெண் மீது எப்படி காதல் கொள்ள முடியும் ?
காமம் கொள்ள முடியும் ?
கலவி கொள்ள முடியும் ?
எப்பேர்ப்பட்ட  நகைமுரண் இது!
தாயாய்ப்  பார்
தமக்கையாய்ப் பார்
தங்கையாய்ப் பார்
என்றெல்லாம் ஆணைக் குற்றஉணர்வுக்கு ஆளாக்கி
அவனைக் குன்றிப் போகச்செய்வது சரியா ?

எந்தச் சமூகம் புனிதமென்ற  இல்லாத சொல் கொண்டு பெண்ணை
சட்டகத்துள் அடைக்க முயன்றதோ அவர்களின் உணர்வுகளை அடக்கப் பழக்கியதோ
அதே சமூகம் ஆணுக்கு அதை உடைக்க அனுமதித்து அவனை நிர்வாணமாக்கிக்  கேள்வி கேட்கிறது!
சொல்லுங்கள் தோழிகளே
ஒரு ஆண்
எப்படி காமம் தவிர்ப்பது ?
கண்ணியம் காப்பது ?

கலாச்சாரக்  களியாட்டங்களுக்குக்  கட்டுண்டு
உணர்ச்சிகளைப் பொசுக்க முயன்று தோற்று சிக்கிச்  சின்னாபின்னமாகும்
இரு பாலரும் என்னதான் செய்வது ?
பதின்ம வயதில் ஏற்படும் ஆர்வம் அழகாவதும் அவலமாவதும் யார் கையில் ?
இதற்கெல்லாம் தோற்றுவாய் தான் என்ன ?

அதீதமான கொடூர சம்பவங்கள் அரங்கேறிய பின்
பாலினக் கல்வி வேண்டும் வேண்டும் என்று
உலகமே கதறுகிறது இன்று
ஆனால்
அதே சட்டகத்துக்குள் நின்று கொண்டு !



சொல்லுங்கள் தோழிகளே
அறியாமல்தான் கேட்கிறேன் 
ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என
எதிர்பார்க்கிறீர்கள்?

ஆனால் ஒன்று நிதர்சனம்
ஆணாயினும் பெண்ணாயினும் 
இச்சமூகத்தில் இருத்தலியம் அவ்வளவு எளிதல்ல !



Monday, 21 August 2017

ரசித்த காத்திரக் கவிதை

பெண்ணின் உடல் வேண்டும்
வெறிபிடித்த குருட்டு வேட்டைநாயின்
வேட்கையாய் இருக்கிறது
தேகத்தின் தகிப்பில் கிடைத்த முத்தங்கள் அணைப்புகள் போதுமானதாயில்லை
இரவின் தீராத கண்களில்
ஊறும் காமம் யோசிக்கும் பெண்களையெல்லாம்
புணர்ந்து வெட்கிக் கூச்சமடைகிறது
புரட்டும் பக்கங்களில் நெளியும் வார்த்தைகள் பாம்பின் விஷமென   பரவி மரணிக்கிறது
வெறும் உடல் வேண்டும் பெண்ணின் உடல் வேண்டும்
எப்படி ஆரம்பிக்கலாம்
காதலிப்பதாய் சொன்னால் ஒப்புக்கொள்வார்களா
முத்தங்களுக்கும் முலைகளுக்கும்!

- கென்


Monday, 17 July 2017

சிதறல்

கோபமா? திட்டித் தீர்த்துவிடுங்கள்.
இயலாமையா? விரைவில் சரிசெய்து கொள்ளுங்கள்.
கனவா? எப்பாடுபட்டாவது நனவாக்குங்கள்.
வெறுப்பா? விரும்பக் கற்றுக்கொள்ளுங்கள்.
நேசியுங்கள் எதையும்.
இல்லையேல்...
ஏதேனும் ஒரு இரவில்
நீங்கள் நிரந்தரமாக உறங்க வாய்ப்பிருக்கிறது
நிரப்பப்படாத வெற்றிடங்களின் சிதறல்களால்!

முத்தம்

தூய அன்பாகவும் பாசமாகவும்
அன்னையிடம் உணரும்
ஆச்சர்யமாகவும் ஆனந்தமாகவும்
குழந்தையிடம் உணரும்
வெட்கம் குழைத்த புரியாத இன்பமாக
காதலர்கள் உணரும்
காதலாகவும் முரட்டுக் காமமாகவும்
கணவன்-மனைவி உணரும்
ஆறுதலாகவும் அரவணைப்பாகவும்
வயசாளிகள் உணரும்
இச்சையின் ஆரம்ப நிலையாக
காமவேட்கையின் தொடக்கமாகப்
பலரும் முரண்பாடாக உணரும்
எவரும் தவிர்க்க விரும்பாத தவிர்க்க இயலாத
ஒரு தொடுமொழி
ஒரு மென் தீண்டல்
ஒரு அழகிய உணர்வு
முத்தம்!

Sunday, 23 October 2016

அந்தக்கரணத்தின் பிறழ்வு

தூக்கத்துடன் போராடிக் கொண்டிருந்த பின்னிரவில்
துக்கமாய் வந்தது கோரவிபத்தில் நீ இறந்த செய்தி
 பல மைல் தொலைவிலிருந்து அலைபேசி வழியாய்.
கணநேர அதிர்ச்சிக்குப் பின் என்னவாயிற்றோ என்று அறிந்துகொள்ளும் ஆவலே கூடிற்று
ஈன புத்திக்கு.
செயற்கையாய் ஒரு பரபரப்பைத் தேடிற்று அற்ப மூளை.
சடுதியில் உன் நினைவுகள் மூளைக்குள் கசிய அவற்றுள் தேடினேன் உன் சாவின் வீச்சை.
உன்னுடன் அளவளாவிய பொன்னான நேரங்கள் கண்களில் மின்னி மின்னி மறைந்து மறைந்து பூச்சாண்டி காட்ட உதடுகளில் உறைந்தது மென்புன்னகை.
பயணச் செலவு
அவசர விடுப்பிற்கான திட்டமிடல்
பசி
தாகம் இத்யாதி..இத்யாதி..எச்சுழ்நிலையையும் தன்வசமாக்கும் இந்தப் பாழாய்ப்போன மனதை ஆட்கொள்ள
காணாமல் போனது உன் இல்லாமையின் தீவிரம்.
கண்களில் துளி நீரில்லை
பெரிதாக வலியில்லை
ஒரு சிறு அதிர்வு அதன் பின்
அமைதி
அவ்வளவே.
வெற்று மனநிலையில் அறைக்குள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த என்னைப் பார்த்து நொந்துகொண்டது அறம்.
நிரந்தரமில்லா வாழ்வில் கவனம் கலைக்க மாயைகளும் குப்பைகளும் ஏராளம் ஏராளம்.
உள்ளது உள்ளபடி கொட்டிவிட்டேன் மன்னிப்பதும் தண்டிப்பதும் உன்பாடு தோழா!
இனி நீ இல்லை என்ற உண்மையை மட்டும் சுமந்து கொண்டு
இதோ கிளம்பிவிட்டேன்
பெருந்துயரம் நோக்கிய
எந்த அதிர்ச்சியையும் நீர்த்துப்போகச் செய்யும் நெடுந்தூரப் பயணம் செய்ய...

Monday, 6 June 2016

விடையில்லா புதிர்

என்றோ ஒரு நாளின் மகிழ் மாலைப்பொழுதினிலோ
இருள் சூழ்ந்த இரவினிலோ
ஏதோ ஒரு வகையில்
அறிமுகமாகியிருக்கலாம்.

சந்தோஷத் துளிகளின் சாகரமாகவும்
துக்கங்களின் வடிகாலாகவும் இருந்திருக்கலாம்.

ஒரு நேரம் தோழமை
மறு நேரம் காதலில்லா காதல்
ஒரு நேரம் அதீத அன்பு
மறு நேரம் தீரா வெறுப்பு
என்று புரட்டிப் போட்டிருக்கலாம்.

உயிர்வரை ஊடுருவும் நேசமாய்
பெரும் நம்பிக்கையாய்
துவளும் பொழுதுகளில் ஆறுதலாய்
புலம்பல்களின் குப்பைத் தொட்டியாய்
இருந்திருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் உச்சமாய்
உள்ளத்தில் உறங்கும் காமத்தை உசுப்பும் காரணியாய்
அதன்பொருட்டே அதை வெறுக்கும் காரணியாய் இருந்திருக்கலாம்.

இந்த உறவு தொடர்வது சாத்தியமில்லை என்று உணரும் தருணங்களில் மனம்நொறுங்கிப் போயிருக்கலாம்.

இன்னது என்று பெயரிட்டுச் சொல்ல இயலாத இப்படியான புதிரான உறவுகள்
சில நேரங்களில்
நெஞ்சை வருடும் பனிநீர் பூக்கள்
பல நேரங்களில்
நெஞ்சை நெருடும் நெருஞ்சி முட்கள்.

ஒரு தெருவில் உத்தேசமாக நகரும் மனிதத் தலைகளில் அவனுக்கு ஒரு அவளோ
அவளுக்கு ஒரு அவனோ
மூளையின் ஏதோ ஒரு மூலையில் நிரந்தரமாய் இருக்கக்கூடும்!

Thursday, 25 February 2016

மகேஷின்டே பிரதிகாரம் - ஒரு பாராட்டு பதிவு





மலையாளக் கரையின் திரைப்பட இயக்குநர்களின் சிந்தனையும், ரசனையும், தைரியமும் அவர்களின் வித்தியாசமான முயற்சிகளிலேயே தெரிகிறது. ரசனையின் அளவுகோல் மாறுபட்டிருப்பதை நன்றாகவே உணர்ந்திருக்கும் திரைப்பட பிரம்மாக்கள், ஒரு கதையை எப்படி எடுத்தால் அது மக்களைப் போய்ச் சேரும் என்பதில் அப்டேட்ட்டடாக  இருக்கிறார்கள். ஒரு படத்திற்காக அவ்வளவு உழைக்கிறார்கள். அந்த உழைப்பு படத்தின் டீட்டெய்லிங்கில் தெரிகிறது. சமீபகாலமாக மலையாளப் படங்கள் அவ்வளவு ரசனையாக எடுக்கப்படுகின்றன.


தமிழ் மக்களுக்கு மலையாளப் படங்கள் முன்னும் பின்னுமாக பரிச்சயம் என்றாலும் திரிஷ்யம், ஹெள ஓல்டு ஆர் யூ, பெங்களுர் டேஸ் படங்களால் உண்டான  கிரேஸ்’, பிரேமம், ஒரு வடக்கன் செல்ஃபி, என்னு நின்டே மொய்தீன், சார்லி, ஆக்சன் ஹீரோ பிஜூ என்று தீப்பிடித்து எரிகிறது. எல்லாமே வித்தியாசமான, தரமான படைப்புகள். அந்த நெருப்பில் தூபம் போட்டாற் போல் வெளிவந்திருக்கிறது மகேஷின்டே பிரதிகாரம்”(மகேஷின் பழிவாங்கல்). ஒரு வெகுசாதாரணமான கதையை வெகுசாதாரணமான காட்சிகளால் நகர்த்தி கதாபாத்திரங்களுக்குள் சுவாரஸ்யங்களைப்  புதைத்து பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார் இயக்குநர். கேரள சினிமாவின் சிறப்பே நல்ல கதையம்சமுள்ள மசாலாதனம் இல்லாத கதை பண்ணும்போது அதன் இயல்பிலிருந்து இம்மியளவு கூட விலகாமல் கதைக்கு என்னத் தேவையோ அதை அப்படியே நடிகர்களுக்குள் புகுத்தி அவர்களை அக்கதாபாத்திரமாகவே உலவவிட்டு படத்தின் நேட்டிவிட்டியை உயிர்ப்புடன் வைத்திருப்பதே! படத்தின் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரிகிறது. பல கதைகள் கதைக்கிறது. காட்சிகள் இயல்பான அழகியலோடும் நுணுக்கத்தோடும் நகர்கின்றன. படம் முடிந்து வெளியில் வந்ததும் முதலில் கூகுளில் தேடியது கலைஞர்களின் பெயர்களைத்தான். காட்சிகளை அணுஅணுவாக செதுக்கியிருக்கிறார் இயக்குநர் திலீஷ் போத்தன். இவருக்கு இயக்குநராக இது முதல்படம். பிண்ணனியிலும்  பாடல்களிலும் கதையோடு இயைந்து இழைந்து  பயணிக்கும் பிஜூ பால் இசை, ஒரு காட்சியில் கூட கூடுதல் நீளமாக உணரவே விடாமல் வெட்டி ஒட்டியிருக்கும் ஷாஜூ ஸ்ரீதரன், செமயான திரைக்கதை பண்ணியிருக்கும் ஷியாம் புஷ்கரன், இடுக்கியின் வனப்பை குளுகுளுவென கண்ணில் காட்டிய ஷைஜூ காலித் என்று மொத்த படக்குழுவினருக்கும் பெரிய பாராட்டுக்கள்!


ஒரு பிரபலமான நடிகனை வைத்துக்கொண்டு இப்படியான ஒரு கதையை பண்ணுவதற்கான சாத்தியமே தமிழில் இல்லை என்பதுதான் உண்மை. கதையை கந்தகோலமாக்கி விட வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், தமிழ்நாட்டில் நடிகர்கள் மீதான பார்வையே வேறு. ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே அடைத்து வைப்பது நம்மவர்களுக்கு கை வந்த கலை. அதனால்தானோ என்னவோ தமிழின் ஆகச்சிறந்த படங்களில் பெரும்பாலும் அதிகம் கவனிக்கப்பட்டிராத கலைஞர்கள் அல்லது புதுமுகங்களே  நடித்திருப்பார்கள். சந்தேகமேயில்லாமல் அது மாதிரியான முயற்சிகள் வசூல்ரீதியாக தோல்வியடைந்திருக்கும். அதையும் மீறி ஒரு பிரபலம் நடித்தாலும், சதை கிழிந்து எலும்பு துருத்திக்கொண்டு நிற்பதைப் போல அவர் மட்டும் தனியாகத் தெரிவார். கதாபாத்திரமாக அல்ல. அவர் பெயரிலேயே அறியப்படும் அளவுக்குத்தான் இருக்கும். ஒருவேளை கதாபாத்திரமாகவே மாறினாலும் தமிழ் மக்கள் அதையும் அந்த பிரபலத்தின் சிறந்த நடிப்பாகவே பார்க்கிறார்களே அன்றி கதாபாத்திரமாக அல்ல. அங்கே கதையும் கதைமாந்தர்களும் காணாமல் போய்விடுவார்கள். பாபநாசம் சிறந்த உதாரணம். விதிவிலக்கில்லாத விதியும் இல்லையாதலால் சில படங்கள் கிளிக்ஆகிவிடும். தற்போதைய பிரபலம் முந்தைய அறிமுகம். வரலாற்றைப் புரட்டினால் பிரபலங்களின் ஆரம்பகாலப் படங்கள்தான் என்றுமே பேசப்படுபவையாக இருக்கும். இப்படியான மனநிலையில் மலையாளப் படங்கள் தனித்து தெரிவதை தமிழர்கள் உணர்கிறார்கள். ரசிக்கிறார்கள். போதாக்குறைக்கு எல்லா மலையாளப் படங்களிலும் ஏதோ ஒரு வகையில் தமிழை உபயோகித்து விடுவதால் இன்னும் கூடுதலாக ஒரு பிடிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.


கேரள மண்ணில் இந்த ஹீரோயிசபராக்கிரமங்களுக்கெல்லாம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் அறவே இடம் கிடையாது. இங்கு எல்லா கலைஞர்களிடமும் ஒரு ப்ளெக்ஸிபிலிட்டிஇருக்கிறது. எந்த பிரபலம் நடித்தாலும் கதைதான் நாயகன். கதைதான் பேசும், பாடும், ஆடும், காதலிக்கும், சண்டையிடும், உனர்ச்சிவசப்படும்! இன்னும், எல்லாம் செய்யும். அந்தத் தரம்தான் ஒரு நல்ல திரைப்படத்தின் வெற்றி. “மகேஷின்டே பிரதிகாரம்கொஞ்சம் கூட பிசகாமல் அப்படியான தரத்துடன் இருக்கிறது.


படம், ஒரு ஜோடி செருப்பில் ஆரம்பாகிறது. கேரளாவில் இடுக்கி ஒரு பெரிய மாவட்டம் ஆனால் குறைந்த மக்கள்தொகையும் அதிக வனப்பகுதியும் கொண்டது. இடுக்கியின் அழகியலை ஒரு பாடலோடு அழகாக உணர்த்தி நகர்கிறது கேமரா. இடுக்கியும் இடுக்கி சார்ந்த மக்களும் தான் கதைநாயகர்கள். மகேஷ் பாவனா என்ற ஃபோட்டோகிராபராக ஃபகத் ஃபாசில் பின்னிப்பெடலெடுத்திருக்கிறார். படத்தின் முக்கியமான திருப்புமுனையாக அமையும் காட்சியும், ஒரு சண்டைகாட்சியும் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அட்டகாசமானது. இயக்குநருக்கு அதற்காக ஒரு ஷொட்டு. மகேஷின் தந்தை வின்சென்ட் பாவனாவாக கே.எல்.அந்தோணி. முகபாவனைகளிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார். ஃபோட்டோகிராபி பற்றிய அவரது எண்ணமும் அதை மகனுக்கு கடத்தும் காட்சியமைப்புகளும் கவித்துவமானவை. செளம்யாவாக அனு ஸ்ரீ. ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளைத்  திட்டித்தீர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். ஜிம்சியாக அனுபமா பாலமுரளி. இவர்தான் நம்ம பசங்களுக்கு பிடித்தமான துடுக்கான, மிடுக்கான, அழகான, கொஞ்சம் அறிவான, வெகுளித்தனமான, அடக்கமான ஆனால் வெளியில் திமிராக இருக்கும் பெண். 'பிரேமம்மலருக்கு அடுத்து இந்த ஜிம்சியை இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். கேரளத்தில் கதாநாயகிகளை எங்கிருந்துதான் கண்டுபிடிக்கிறார்களோ? இருவருமே வழக்கம்போல அழகு. அலென்ஸியர் லே என்பவர் பேபி சேட்டனாக அதகளம் செய்கிறார். கிரிஸ்பினாக வரும் செளபின் ஷாகிர், பேபி சேட்டன் மகள் சோனியாவாக வரும் லிஜிமோல் ஜோஸ், ஜிம்சியின் அண்ணன் ஜிம்சனாக வரும் சுஜித் ஷங்கர் என படத்தில் வரும் எல்லா சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வெகுவாக ஈர்க்கிறார்கள். திரையரங்கிலிருந்து குறைந்தது வீடு திரும்பும் வரையிலாவது உங்கள் சொண்டுகளில் மந்தகாசம் அகலாது!


சரி, கதை என்ன என்கிறீர்களா? ஹி..ஹி..முந்தைய பத்தியின் முதல்வரியில் ஒரு ஹிண்ட்இருக்கிறது. அதையும் படத்தின் தலைப்பையும் வைத்து நீங்களாகவே எதையாவது கற்பனை செய்து கொண்டு திரையில் இடுக்கிக்கு ஒரு விசிட்அடிங்க!