Monday, 19 October 2015

அழுக்குப் பக்கங்கள்

பெரும்பாலும் மனித மனங்களில் உண்டாகும் கவலைகள், சஞ்சலங்கள், சந்தேகங்கள், சந்தோஷங்கள், கற்பனைகள், சிந்தனைகள் என எல்லாமே அதனதன் தனித்தன்மையைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. காரணம், இந்த உணர்வுகள் சாஸ்வதமற்றவை! மனிதனுக்கு மனிதன் மாற்றம் பெறுபவை! ஒவ்வொரு மனிதனுக்கும் அதன் அர்த்தங்களில் இருந்து நழுவி வித்தியாசப்படுகிறது.

ஒரு திரைப்படத்தில் வரும் ஆழ்ந்த பொருள் கொண்ட வசனம் நினைவுக்கு வருகிறது.

" வாழ்க்கையில் சில விஷயங்களை நியாயப்படுத்த முடியாது, நியாயப்படுத்தவும் கூடாது."

வாழ்வில் இன்னது செய்கிறோம் எனத் தெரிந்தும், தெரியாமலும், சந்தர்ப்பவசத்தாலும், சூழ்நிலைகளாலும், கட்டுப்பாடில்லாத எண்ணங்களாலும், உளவியல் கோளாறுகளாலும் மனிதர்கள் செய்யும் தவறுகள் எத்தனை எத்தனை? நியாயப்படுத்த முடியாத, நியாயப்படுத்தவும் கூடாத விஷயங்கள் எத்தனை எத்தனை?!! மனிதனின் மனநிலைக்கு உகந்தாற்போல் இவை பரிமாணம் பெறுகின்றன.
கடும் மன உளைச்சல்கள், குற்ற உணர்ச்சி, வஞ்சகம், மனப்பிறழ்வுகள், கோபதாபங்கள், வக்கிரங்கள் என எல்லா எதிர்வினைகளுக்கும் பின்புலம் இப்படிப்பட்ட விஷயங்கள்தான். தனிமைப் பொழுதுகளில், இரவுகளில் இந்த உணர்வுகளின் உக்கிரம் அதிகம்! கடலில் உருவாகி, அதிலிருந்து தப்பிப் பிழைத்து கரையைச் சேரும் அலைகள் தன் ஸ்திரத்தை இழந்து மீண்டும் உள்ளிழுக்கப் படுவதை போல உணர்வுகள் முட்டி  மோதுகின்றன. உடைந்து சிதறுகின்றன. மறுவடிவம் பெற்று திடீரென உயர்த்தெழுந்து கருவில் இருந்து வெளிவரத் துடிக்கும் குழந்தை போல வெளிவரத் துடிக்கின்றன! முயன்று, அமிழ்ந்து,எழுந்து, பின் அடங்கும் இந்த உணர்வுப் பாறைகளின் கசிவுகள் இந்த உலகத்தின் ஸ்திரத்தை அசைத்துப் பார்க்கின்றன. உலகம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மனிதன் உருவாக்கிய கொள்கைகளை, கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றன! அடிமனதில் வேரூன்றி இருக்கும் அந்த விஷயங்கள் இறுதிவரை ஒரு கரையானைப்போல் மனதை அரித்துக்கொண்டே இருக்கிறது. விடவும் முடியாது வைத்துக்கொள்ளவும் முடியாது. அத்தனை சிக்கலானது!

****
ஏனோ இந்த அழுக்குப் பக்கங்களின் மீது தனி கவனம் செல்கிறது. அதைப் படிப்பதில், ஆராய்வதில், சிந்திப்பதில் ஒரு இன்பம் இருப்பதாக தோன்றுகிறது.
மனதின் இந்த அழுக்குப் பக்கங்கள் விகாரமானவை. நம் மிருக பிம்பத்தை நமக்கு உணர்த்துபவை. தன் தவறுகளை, வக்கிரங்களை, அகோர முகத்தை அடையாளம் காணாத யாரும் வாழ்க்கை பற்றிய தெளிவை, ஒரு நம்பகத்தன்மையை பெறுவதில்லை. ஆம், இந்த அழுக்குப் பக்கங்கள் மனிதனைப் பண்படுத்தி நல்வழிப்படுத்தும் ஒரு பாசுரம்! தனிமையில், பொது இடங்களில், அலுவலகங்களில்,வீடுகளில் என ஒவ்வொருவருடைய விகார முகங்கள் அவர்களின் தன்மைக்கேற்ப வெளிப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் பூட்டும் சாவியும் மனித மனம் மட்டுமே!




No comments:

Post a Comment