Tuesday, 20 October 2015

வாசிப்பு

புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வாசிப்பு "வாழ்க்கையைக் கற்றுத்தரும்", "சிந்தனையின் எல்லையை விரிவுபடுத்தும்", அறிவை வளர்க்கும்", இப்படிப் பலப்பல. அதில் முக்கியமான ஒன்று, "புத்தக வாசிப்பு உன்னை நல்வழிப்படுத்தும்" எனும் கூற்று.
உண்மை நிலை அதுவல்ல.

புத்தகம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட பார்வை. அது அவர் எடுத்துக்கொண்ட கருவைப் பொறுத்தும் அவர் மனநிலையைப் பொறுத்தும் வெளிப்படும். ஒரு வாசகனுக்கு அந்தத் தெளிவு இருந்தால் மட்டுமே வாசிப்பு இனிமை தரும். மனிதனை திசைமாற்றும் அபாயம் புத்தகங்களுக்கு உண்டு. ஒரு புத்தகம் என்றுமே ஒருவனைத் திருத்தவோ, நல்வழிப்படுத்தவோ உதவுவதில்லை. மாறாக, அவனை சிந்திக்கத் தூண்டுகிறது. அந்த சிந்தனைகளின் வடிவமாக அவன் உருமாறுகிறான். மனிதனின் இயல்பை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அவனைச் செறிவடையச் செய்யவும், தவறு செய்யத் தூண்டவும் புத்தகங்களால் முடியும். அது புத்தகங்களுக்கே உரித்தான தன்மை. இருவினைகளின் வடிவமே, புத்தகம்! போராளியும் புத்தகம் வாசிக்கிறான். தீவிரவாதியும் புத்தகம் வாசிக்கிறான். அஹிம்சாவாதியும் புத்தகம் வாசிக்கிறான். ஒரே புத்தகம். முப்பரிமாணம். புத்தகம் இதை சாத்தியமாக்கும்!!

எல்லாவிதமான புத்தகங்களையும் வாசித்து, ஆராய்ந்து, அதன் கருவை உள்வாங்கி அலசுபவனே ஒரு நல்ல வாசகனாக இருக்க முடியும்! வாசிப்பின் விஸ்தீரணம் அப்படியானது.

சில புத்தகங்களை வாசிக்கும் போது உணரும் ஒரு அற்புதமான விஷயம், வாசிக்கும்போதும் வாசித்து முடித்தபின்பும் புரிபடா தன்மை! வாசிப்பின் வேகத்தில் நம் கண்களுக்குத் தட்டுப்படாத வார்த்தைகளும், தவறவிட்ட விடயங்களும், ரசிக்கத் தவறிய எழுத்துநடையும், மீண்டும் உயிர்பெற்று எழும் அந்த புத்தகங்களை மீண்டும் வாசிக்கும்போது!
ஒவ்வொரு முறையும் ஒரு புது உயிர்!
புது அர்த்தம்!
பழகிய விஷயங்கள் பற்றிய வேறுபார்வை!
அதாவது, நவீனத்துவத்தை உடைத்து பின்நவீனத்துவம் வந்ததைப் போல!
எழுத்துக்களின் நடனம் மட்டுமே இதை சாத்தியமாக்குகிறது.

****

மனத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து புத்தகங்களை வாசிக்கும்போது ஒரு வாசகனாக நான் உணர்ந்தது மூன்று நிலைகள்.

நிலை 1:

ஒரே மூச்சில் ஆர்வமுடன் படித்து முடித்து புத்தகம் உணர்த்தும் விடயம் மனதில் பதிந்துவிடுவது.

நிலை 2:

புத்தகம் முழுவதும் படித்து முடித்தாலும் எழுத்தாளரின் எண்ணத்தை, கதைக் கருவை, உணர்த்தும் விடயத்தை அவரவர் தன்மைக்கேற்றாற்போல் புரிந்துகொள்வது.

நிலை 3:

முழுதாக ஒரு மணிநேரம் தாண்டியிருக்காது. வார்த்தைகளை உதடுகள் வாசிக்கும். வாசிப்பதை மூளை உணரும். ஆனால், மனதில் தங்காது. தலையில் பாரம் வந்து அமர்ந்துகொள்ளும். பயங்கர வலி ஏற்படும். ஒருவிதமான மயக்கநிலை (இந்த மனச்சிதறல்கள் எதனால்? எழுத்துக்களின் கடின நடையா? புரிந்துகொள்ள முடியாத ஆதங்கத்தின் வெளிப்பாடா? தெரியவில்லை).

****

இந்தக் கட்டுரை இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்லாமல் முழுமைபெறாது.
நாவல்: ஜே.ஜே சில குறிப்புகள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி

ஜே.ஜே என்ற கதாபாத்திரத்தை முன்னிறுத்தி அவர் கையாண்டிருக்கும் களம் அசாதாரணமானது. ஜே.ஜே வின் பார்வையில் உலகம் விரிகிறது.மனித வாழ்க்கையின் எதார்த்தத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடுகள், இடைவெளிகள் பற்றியதே நாவலின் பேசுபொருள்.
மனிதனை வண்டாய் குடைந்துகொண்டிருக்கும் கேள்விகள், குழப்பங்கள், சிக்கல்கள் பற்றி அந்த வண்டை விட வேகமாய் குடைந்து தீர்வைத் தேடி அலைகிறது, ஆராய்கிறது இந்த நாவல் என்பது என் பார்வை.
ஒரு முடிவு அல்லது தீர்வு (என நினைப்பது) இன்னொன்றின் தொடக்கம் என்பதே! அப்படிப்பட்ட தேடல்கள் இந்த நாவல் முழுக்கக்கொட்டிக்கிடக்கிறது. ஒரு நாவலாக இந்த எழுத்துகள் புரிகிறதோ இல்லையோ, பக்கங்களைத் துண்டுபிரசுரங்களாகக் கற்பனை செய்துகொண்டால் நிச்சயம் ஏதேனும் ஒரு பிரசுரம் உங்களுக்கானதாய் இருக்கும்!!


No comments:

Post a Comment